திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி 23-ம்தேதி முதல், ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து விட்டு, அதன் பின்னர் வைகுண்ட வாசல் வழியே சென்று சுவாமியை பிரதட்சனமும் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
இது ஆண்டிற்கு வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 நாட்கள் மட்டுமே நடைபெறுவதால், இவ்வழியே சுவாமியை பிரதட்சனம் செய்ய லட்ச கணக்கான பக்தர்கள் விரும்புவது வழக்கம். ஆதலால், கடந்த சில ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தானமும், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் தொடர்ந்து சொர்க்க வாசல் தரிசன ஏற்பாட்டை செய்து வருகிறது. இதற்காக இன்று 10-ம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையத்தின் வாயிலாக, ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை தினமும் 25000 டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கான 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் இன்று வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து தினசரி 2000 ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை 10 நாட்களுக்கேற்ப, அதாவது 20 ஆயிரம் டிக்கெட்டுகளையும் இன்று மதியம் 3 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிட உள்ளனர். இதனை பெற்றுக்கொண்ட பக்தர்களும், ரூ.300 டிக்கெட் வாங்கிய பக்தர்களுடன் தான் அனுமதிப்பர் என ஏற்கனவே தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், இன்று மாலை 5 மணிக்கு இந்த 10 நாட்கள் திருமலையில் தங்கும் இடத்திற்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.