என்னை யாரும் நடிக்க அழைக்க வேண்டாம்: இயக்குனர் வெற்றிமாறன்

சென்னை: இயக்குனர் அமீர் தயாரித்து நடித்துள்ள படம், ‘மாயவலை’. ஆர்யா தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சாய் தீனா, வின்சென்ட் அசோகன், சரண் நடித்துள்ளனர். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தை கிராஸ்ரூட் நிறுவனம் சார்பில் வெளியிடும் இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது: அமீருடனான நட்பின் காரணமாக இப்படத்தை வெளியிடுகிறேன்.

தவிர, இப்படத்தின் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. ரமேஷ் பாலகிருஷ்ணன் சினிமாவிலுள்ள அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்தவர். எனது படங்களை அவரிடம் காட்டி, அவரது கருத்தைக் கேட்பேன். ஏற்கனவே சில படங்களை இயக்கியுள்ள அவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு இரவில் நடக்கும் கதை இது. ஒரு சின்ன சம்பவம் எப்படி பல விஷயங்களைப் புரட்டிப்போடுகிறது என்பது கதை. ஒருபுறம் காதல், மறுபுறம் திரில்லராக படம் உருவாகியுள்ளது. அமீரை நான் இயக்கிய ‘வட சென்னை’ படத்தில் நடிக்க வைத்தேன். அதற்காக, அவரும் என்னை நடிக்க வைக்க தீவிர முயற்சி செய்து வருகிறார்.

பல இயக்குனர்கள் என்னை நடிக்கும்படி கேட்டுள்ளனர். நடிப்பது ஒரு திறமை என்றால், படம் இயக்குவது இன்னொரு திறமை. இரண்டு திறமைகளும் சிலரிடம் மட்டும்தான் இருக்கும். என்னிடம் இயக்கம் மட்டுமே இருக்கிறது. எனக்கு நடிக்க தெரியும் என்றாலும், ஏனோ அதில் விருப்பம் இல்லை. எனவே, யாரும் என்னை நடிக்க அழைக்க வேண்டாம். வெப்தொடர் இயக்குவதற்கான பணிகளை தொடங்கினேன். அப்போது டைட்டில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து நிறைய பிரச்னைகள் ஏற்பட்டதால், தற்போது அந்த திட்டத்தை தள்ளி வைத்திருக்கிறேன்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »